அடுத்த தலாய் லாமா தேர்வில் தலையிட கூடாது.. மீறினால்.. இந்தியாவுக்கு சீனா கடும் வார்னிங்!

பெய்ஜிங்:
அடுத்த தலாய் லாமா தேர்வில் தலையிடக் கூடாது என்றும் மீறினால் நல்லுறவில் விரிசல் ஏற்படும் என்றும் இந்தியாவுக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 14-ஆவது தலாய் லாமாவாக இருப்பவர் டென்சின் கியாட்ஸோ. திபெத் மீது சீனா ஆக்கிரமிப்பு செய்த போது 1959-ஆம் ஆண்டு திபெத்தை விட்டு வெளியேறிய தலாய் லாமா இந்தியாவில் அடைக்கலம் அடைந்தார்.
இதையடுத்து ஹிமாச்சல பிரதேசத்தில் தர்மசாலாவில் அவருக்கு இந்திய அரசு குடில் அமைத்து கொடுத்தது. இந்த நிலையில் 84 வயதாகும் இவருக்கு அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.
எச்சரிக்கை
இந்த நிலையில் அடுத்த தலாய் லாமாவை சீனாவே தேர்வு செய்யும். இதில் இந்தியா தலையிடக் கூடாது. அதையும் மீறி தலையிட்டால் இரு தரப்பு உறவில் பாதிப்பு ஏற்படும். தலாய் லாமா தேர்வு என்பது 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரபு என்றும் சீனா எச்சரிக்கை
நியமனம்
இதுகுறித்து சீன அதிகாரிகள் கூறுகையில் சீனாவுக்குள்ளேயே தலாய் லாமா தேர்வு செய்யப்படுவார். இதற்காக 10 அதிகாரிகள் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.
வரலாற்று அமைப்புகள்
இதுகுறித்து திபெத் அரசின் டைரக்டர் ஜெனரல் வாங் நெங் ஷேங் கூறுகையில் தலாய் லாமா நியமனம் விவகாரம், வரலாறு, மதம் மற்றும் அரசியல் ரீதியிலானது. அதற்கான வரலாற்று அமைப்புகள் உள்ளன.
அடுத்த தலாய் லாமா யார்?
அவரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகளும் உள்ளன. தலாய் லாமா யார் என்பதை தனிப்பட்ட நபரோ அல்லது வெளிநாடுகளில் உள்ள மக்களோ தீர்மானிக்க முடியாது என்றார். இதுகுறித்து திபெத் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ஜா லுவோ கூறுகையில் அடுத்த தலாய் லாமா யார் என்பது குறித்து சீனாவுக்கு முக்கியமான பிரச்சினை. இதில் எந்த நட்பு நாடோ சீனாவின் நண்பர்களோ தலையிட கூடாது என கூறியுள்ளார்.