ஓய்வு குறித்து அறிவித்து முற்றுப்புள்ளி வைத்த தோனி!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்தது முதலாகவே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் பேசுபொருளாக மாறியிருப்பவர் மகேந்திர சிங் தோனி. 38 வயதாகிவிட்ட நிலையில் தோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிடுவார் என்ற தகவல்கள் தான் சமீபத்திய நாட்களில் விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது.
இதுவரை தோனியோ அல்லது இந்திய கிரிக்கெட் வாரியமோ இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடாத நிலையில் தற்போது தோனியின் ஓய்வு பற்றிய பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமான விஷயம் அரங்கேறியுள்ளது.
பாரா ரெகிமெட்ண்ட் படையில் இணைய இருப்பதால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தான் தற்காலிகமாக அணியில் இடம்பெறமுடியாது என இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு தோனி தகவல் அனுப்பியுள்ளார். இதன் மூலம் ஆகஸ்ட் 8ம் தேதி தொடங்கவிருக்கும் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் தோனி கலந்துகொள்ள இயலாது என்பது உறுதியாகியுள்ளது.
மேற்குஇந்திய தீவுகளுக்கு செல்லும் இந்திய அணி, 3 டி-20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இதற்கான இந்திய அணியை பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு நாளை அறிவிக்க உள்ளது.
விமானப்படையின் பாராசூட் ரெஜிமெண்டில் லெப்டினன்ட் காலனெல் என்ற கவுரவ பதவியில் இருந்து வரும் தோனி, உலகக் கோப்பை தொடரில் கூட அப்படை மீதான தனது அன்பினை வெளிப்படுத்தியிருந்தார். பாராசூட் ரெஜிமெண்டின் லட்சினை பொறிக்கப்பட்ட கையுறையுடன் போட்டிகளில் கலந்து கொண்டு பின்னர் அதற்கு ஐசிசி தடை விதித்தது நினைவிருக்கலாம்.
இது தொடர்பாக பிசிசிஐயின் பெயர் கூற விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில், “முதலில் சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன், கிரிக்கெட்டிலிருந்து தற்போதைக்கு தோனி ஓய்வுபெறவில்லை, இரண்டு மாத காலத்திற்கு தற்காலிக ஓய்வு எடுக்கவுள்ளார், தோனியின் முடிவு குறித்து கேப்டன் கோலிக்கும் தெரியப்படுத்தியுள்ளோம்” என்றார்.
தோனியின் நண்பர் அருண் பாண்டே கூறுகையில், குறைந்த ஓவர்கள் வடிவ கிரிக்கெட்டிலிருந்து தற்போதைக்கு ஓய்வு பெறும் முடிவுக்கு தோனி இன்னமும் வரவில்லை என்றே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.