சூரியனை ஆய்வு செய்யும் செயற்கைகோள் பற்றிய இஸ்ரோ தலைவரின் தகவல்..!

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா செயற்கைக்கோள் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன் , சந்திரயான்-2 விண்கலம் 23ம் தேதி முதல் தகவல்களை அளிக்க தொடங்கும் எனவும், ஆனால், நிலவில் உள்ள தகவல்களை பெற இன்னும் ஒரு மாதம் காத்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். திட்டமிட்டப்படி சரியாக தரையிறங்கினால் நிலவில் யாரும் போகாத இடத்தில் சந்திரயான்-2 விண்கலம் நிறுத்தப்படும் என தெரிவித்தார்.
நிலவின் வடதுருவப் பகுதியைவிட தென்துருவப் பகுதியில் நிழல் அதிகமாக இருக்கும் என குறிப்பிட்ட அவர், அங்கு நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கக்கூடும் எனவும், அது புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு பயனுள்ளதாக அமையும் எனவும் தெரிவித்தார்.
மேலும், சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா விண்கலத்தை அடுத்தாண்டு முதல் பாதியில் அனுப்பும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், அதற்கு முன்னதாக மங்கள்யான்-2 திட்டத்திற்கான பணிகள் தொடங்கும் எனத் தெரிவித்தார்.