தமிழகத்தின் 34, 35வது மாவட்டங்களை அறிவித்திருப்பதால் சரத்குமார் முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்!

தமிழகத்தில் தென்காசி, செங்கல்பட்டு மாவட்டங்கள் புதியதாக உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழகத்தின் 34, 35வது மாவட்டங்களை அறிவித்திருப்பதற்கு முதலமைச்சரை பாராட்டுவதாக தெரிவித்துள்ளார் சமக தலைவர் சரத்குமார்.
சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு புதிய அறிவிப்புகளை இன்று வெளியிட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், 20 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் சர்வதேச மலர்கள் ஏல மையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் கூறினார். பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் விதமாக நகரங்களில் வார்டுகளிலும், கிராமங்களிலும் நேரடியாக சென்று தீர்வு காண முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டம் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் செயல்படுத்தப்பட உள்ளதாகக் கூறினார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 31 கோடியே 15 லட்சம் செலவில், மீனவ இளைஞர்களுக்கு நடமாடும் மீன் விற்பனை நிலையங்கள் ஏற்படுத்தித்தரப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். நிர்வாக வசதிக்காக திருநெல்வேலி மாவட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியான தென்காசி தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்று அறிவித்தார். இதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து, செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும் என்றும் அறிவித்தார். புதியதாக உருவாக்கப்பட்டுள்ள தென்காசி, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு புதிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும் முதலமைச்சர் கூறினார்.
தென்காசியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற தங்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறியுள்ளதாக தென்காசி மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு, தென்காசி தனி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டிருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டு மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசி மாவட்டமும் புதிதாக அமைக்கப்படுவது வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
நெல்லையில் இருந்து பிரித்து தென்காசி தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். நிர்வாக வசதிக்காக செங்கல்பட்டு தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டு, தமிழகத்தின் 34, 35வது மாவட்டங்களை அறிவித்திருப்பதற்கு முதலமைச்சரை பாராட்டுவதாக தெரிவித்துள்ளார்.