11MLA-க்கள் தகுதிநீக்க வழக்கில் உச்ச நீதிமன்றம் சபாநாயகருக்கு நோட்டீஸ்

புதுடெல்லி:

தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது 2017-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 18-ந்தேதி நடைபெற்ற ஓட்டெடுப்பின் பொழுது, தற்போதைய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்துள்ளனர். அவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சபாநாயகரே சட்டத்தின் அடிப்படையில் உரிய முடிவை எடுப்பார் என கூறி வழக்கை முடித்து வைத்துள்ளார்.
இந்த நிலையில், தி.மு.க. கொறடா சக்கரபாணி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து 3 மாதங்கள் ஆகியும் சபாநாயகர் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சுப்ரீம் கோர்ட்டு இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று, தனது தரப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஓ.பன்னீர் செல்வம், கே.பாண்டியராஜன் உள்ளிட்டோரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது. மணிப்பூர் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த வழக்கும் இந்த மனுவில் மேற்கோள் காட்டப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் விவகாரத்தில் சபாநாயகர் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று கேள்வி எழுப்பினர். இந்த விஷயத்தில் சபாநாயகர் உடனடியாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினர்.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் பதில் அளிக்கும்படி சபாநாயகர் மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த வழக்கைப் பொருத்தவரை அரசுக்கு எதிராக 11 எம்எல்ஏக்களும் வாக்களித்திருந்தாலும் அவர்கள் அதிமுக-வுக்கு எதிராக செயல்படவில்லை என்பதால் கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் இல்லை, என முதல்வர் கூறியுள்ளார்.