4 வயசு குழந்தை.. கடத்தி சென்று கல்லால் அடித்து கொன்ற கொடூரர்கள்.. தேனியில் சோகம்

தேனி:
4 வயசு குழந்தையை கல்லாலேயே அடித்து கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் தேனி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் கோம்பை பகுதியைச் சேர்ந்தவர் முருகன்.இவரது மனைவி கீதா. இவர்களுக்கு ஹரீஷ் என்ற 4 வயது மகன் உள்ளான்.
ஆனால் கீதா கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். அதனால் மகன் ஹரீஷை, அம்மா வீட்டில் தங்க வைத்து ஒரு பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வந்துள்ளார். கடந்த ஞாயிறன்று ஹரீஷ் தெருவில் விளையாடி கொண்டிருந்தான். ஆனால் ரொம்ப நேரம் ஆகியும் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அவனது சித்தி ராஜராஜேஸ்வரி தெருவெல்லாம் தேடி பார்த்தார். அக்கம் பக்கம் வீடுகளுக்கும் சென்று தேடினார்.
குழந்தை கிடைக்கவே இல்லை. இதனால் அவர் போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீசாரும் மாயமான குழந்தையை தேடி வந்தனர். இந்நிலையில், அந்த ஊரின் சுடுகாடு அருகே ஹரீஷ் பிணமாக கிடந்தான். அவன் முகம் முழுவதும் கற்களால் பலமாக தாக்கப்பட்டு இருந்தது. உடம்பெல்லாம் ரத்த காயங்கள் நிறைந்திருந்தன. இதை அறிந்ததும் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சென்ற போலீசார், சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை கடத்தி சென்றது யார், இவ்வளவு கொடூரமாக கொலை செய்ய என்ன காரணம் என்பது குறித்தெல்லாம் தீவிரமாக விசாரிக்கின்றனர்.
Read more at: https://tamil.oneindia.com/news/theni/4-year-old-boy-attacked-stone-and-killed-near-theni-357141.html